
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து இத்தொடரை எதிர்கொள்கின்றனர்.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை இறுதிசெய்ய இன்றே கடைசி தினம் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு அணியும் செய்துள்ள மாற்றங்கள் குறித்து அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தங்களது இறுதி செய்யப்பட்ட அணியை இன்று அறிவித்துள்ளது. அதன்படி முன்பு அறிவித்த அணியில் இடம்பிடித்திருந்த இளம் சுறழ்பந்துவீச்சாளர் அல்லா கசான்ஃபர் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரின் போது கசான்ஃபர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.