
செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபிஎல் லீக் போட்டியானது இன்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 56 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 34 ரன்களையும், பனுகா ராஜபக்ஷா 33 ரன்களையும் சேர்த்து உதவினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 187 ரன்களைக் குவித்திருந்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் வக்கார் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ச் அணியில் ஜேசன் ராய், சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன், கேசி கார்டி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வந்த பேரிஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிக்காமல் இருந்த கீரன் பொல்லார்டும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 7 சிக்ஸர்களை விளாசி 52 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் லூசியா கிங்ஸை வீழ்த்தி வெற்றிபற்றது.