இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தற்போது தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த ஃபார்மில் உள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்திய பிறகு, அவர் தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் காலிறுதிப் போட்டியில், அவர் ஒரு அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்தி மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை கைப்பற்றியும் அசத்தியுள்ளார்.
பஞ்சாப் அணியின் தொடக்க பந்துவீச்சாளராக களமிறங்கிய அர்ஷ்தீப், புதிய பந்தில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினார். தனது கூர்மையான பந்துவீச்சால் மகாராஷ்டிரா அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், சித்தேஷ் வீர் ஆகியோரின் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றிய விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்தவகையில் இன்னிங்ஸின் முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச அதனை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்கவாட் ஓவரின் 5ஆவது பந்தில் பவுண்டரி அடித்த நிலையில், அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்தார். அதிலும் குறிப்பாக அவர் தனது அபாரமான ஸ்விங் திறமையின் மூலம் ருதுராஜின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் தனது பந்துவீச்சில் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.