மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு பணிச்சுமை அதிகம் - ஹர்திக் பாண்டியா!
மற்ற வீரர்களை காட்டிலும் எனக்கு இரண்டு, மூன்று மடங்கு பணிச்சுமை அதிகம். ஏனெனில் நான் ஒருஆல்ரவுண்டர் எனவே என்னுடைய பணிச்சுமையை அதிகமாக இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு பணிச்சுமை அதிகம் - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆசிய கோப்பை தொடரிலும் சரி, எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் சரி இந்திய அணியின் முக்கிய வீரராக பாண்டியா பார்க்கப்படுகிறார்.
எதிர்வரும் உலகக்கோப்பை தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கிய தொடராக பார்க்கப்பட்டு வரும் வேளையில் ஆசிய கோப்பை தொடரில் இவரது சிறப்பான செயல்பாடு தற்போது இந்திய அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அந்த வகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 66 ரனகளுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தருமாறியது.
அவ்வேளையில் இஷான் கிஷனுடன் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்த ஹர்திக் பாண்டியா அந்த போட்டியில் 87 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோன்று நேபாள் அணிக்கு எதிரான போட்டியிலும் பந்து வீச்சில் அவர் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் அவர் தனது பணிச்சுமை குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “மற்ற வீரர்களை காட்டிலும் எனக்கு இரண்டு, மூன்று மடங்கு பணிச்சுமை அதிகம். ஏனெனில் நான் ஒருஆல்ரவுண்டர் எனவே என்னுடைய பணிச்சுமையை அதிகமாக இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். ஏனென்றால் பேட்ஸ்மேன் என்றால் போட்டியின் போது பேட்டிங் செய்ய களமிறங்கி போட்டியை முடித்துக் கொடுப்பார்கள். அதோடு பவுலர்களாக இருந்தால் அவர்கள் பந்து வீசுவார்கள். ஆனால் நான் அணிக்கு தேவைப்படும்போது பேட்டிங்கும் செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால் 10 ஓவர்கள் முழுமையாகவும் பந்துவீச வேண்டும். எனவே மற்றவர்களை விட எனக்கு இரண்டு, மூன்று மடங்கு பணிச்சுமை அதிகம் இருந்தாலும் என்னை சுற்றி அணியில் உள்ள 10 வீரர்கள் எனக்கு உறுதுணையாக நிற்கிறார்கள். எனவே என்னுடைய சிறப்பான செயல்பாட்டை நான் அணிக்காக வழங்குகிறேன். என்னுடைய பந்துவீச்சாக இருந்தாலும் சரி, பேட்டிங்காக இருந்தாலும் சரி இந்திய அணியின் வெற்றிக்காக நான் முடிந்தவரை போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News