
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் நடந்த முடிந்த டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. இதனால் இப்போட்டியானது 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி 23 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்களை எடுத்தது. இலங்கை தரப்பில் பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ் ஆகியோர தலா 56 ரன்களை எடுத்தனர்.
அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 23 ஓவரில் 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பிரண்டன் கிங் 16 ரன்னும், ஷாய் ஹோப் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீர எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தியதுடன் 102 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.