
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத்தொடர்ந்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 384 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி ப்ரூக் 14 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஹாரி ப்ரூக் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதில் ஹாரி ப்ரூக் 61 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, களமிறங்கிய பேர்ஸ்டோவ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 81 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.