
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் நாதன் லையன் 145 ஆண்டுகளில் எந்த பந்துவீச்சாளரும் படைக்காத சாதனையை படைத்தார்.
தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து அசத்தினார். அலெஸ்டர் குல், ஆலன் பார்டர், மார்க் வாக், சுனில் கவாஸ்கர், மெக்கல்லம் என்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்த வரிசையில் நாதன் லையன் முதல் பந்துவீச்சாளராக இடம்பெற்றது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், 100ஆவது டெஸ்ட் போட்டியின் பாதி ஆட்டத்துடன் நாதன் லயன் காயம் காரண்னமாக விலகியுள்ளார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி வீரர்கள் அடித்த பவுண்டரியை தடுக்க நாதன் லையன் கடுமையாக முயற்சித்தார். அப்போது திடீரென அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சக வீரர்களின் உதவியுடன் ஓய்வறை சென்ற லையன், மீண்டும் களத்திற்கு திரும்பவில்லை.