
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படமல் இருந்த நிலையில், அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தை சந்தித்துள்ளதன் காரணமாக, பியூ வெப்ஸ்டருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.