
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியானது அதன்பிறகு ஏழு ஆண்டுகளுகுப் பின் தற்போது பாபர் ஆசாம் தலைமையிலான அணியுடன் இந்தியா வந்தடைந்து ஐசிசியின் 13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டியில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பெற்று நல்ல நிலையில் உள்ளது.
அந்த வகையில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் மூன்று வெற்றிகளுடன் வெற்றி நடை போடுகிறது.
அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 191 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.3 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.