Advertisement

இங்கிலாந்து போட்டிக்காக திட்டங்களை தீட்டியுள்ளோம் - பாபர் ஆசாம்!

தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு எங்களை விமர்சிப்பது மிகவும் எளிதாகும். ஒருவேளை நீங்கள் ஆலோசனைகள் கொடுக்க விரும்பினால் மெசேஜ் செய்யுங்கள் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 10, 2023 • 19:45 PM
இங்கிலாந்து போட்டிக்காக திட்டங்களை தீட்டியுள்ளோம் - பாபர் ஆசாம்!
இங்கிலாந்து போட்டிக்காக திட்டங்களை தீட்டியுள்ளோம் - பாபர் ஆசாம்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் தலையிலான பாகிஸ்தான் வீட்டுக்கு கிளம்புவதற்கு தயாராக இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற அந்த அணி இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் 8ஆவது முறையாக தோற்று ஆஸ்திரேலியாவிடமும் வீழ்ந்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை பதிவு செய்தது.

அத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. ஆனால் இலங்கையை தோற்கடித்த நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. அதனால் இங்கிலாந்துக்கு எதிராக கடைசிப் போட்டியில் 287 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இந்தியாவுடன் அரையிறுதியில் மோத முடியும் என்ற சாத்தியமற்ற நிலைமைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

Trending


இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வியே தங்களுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று தெரிவிக்கும் பாபர் அசாம் இங்கிலாந்துக்கு எதிராக பெரிய வெற்றியை பெறுவதற்கான திட்டத்தை தயாராக வைத்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக நியூஸிலாந்துக்கு எதிராக அதிரடியான வெற்றியை பெற்றுக் கொடுத்த பஃகார் ஸமான் 20 – 30 ஓவர்கள் நின்றால் தங்களால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்துக்கு எதிராக தேவையான ரன்ரேட்டை பெறுவதற்கான திட்டங்களை நாங்கள் தீட்டியுள்ளோம். அதற்காக நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு முதல் பந்திலிருந்து அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்த முடியாது. மாறாக முதல் 10 ஓவர்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தீர்மானித்துள்ளோம். அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்துள்ளோம்.

ஒருவேளை பஃகார் ஸமான் 20 – 30 ஓவர்கள் விளையாடினால் எங்களுக்கு தேவையானதை நாங்கள் சாதிக்க முடியும். கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே இத்தொடரை நாங்கள் உயரமாக முடிக்க விரும்புகிறோம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சந்தித்த போராட்டத் தோல்வி எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தியாவில் எனக்கும் பாகிஸ்தான் அணிக்கும் நிறைய ஆதரவு கிடைத்தது.

மேலும் எப்போதும் நான் அரை சதங்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை வைத்திருப்பதில்லை. ஆனால் பலரும் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருப்பதாக விமர்சித்தனர். இருப்பினும் நான் எப்போதும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அணிக்காக விளையாடுகிறேன். அதே போல தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு எங்களை விமர்சிப்பது மிகவும் எளிதாகும். ஒருவேளை நீங்கள் ஆலோசனைகள் கொடுக்க விரும்பினால் மெசேஜ் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement