
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் தலையிலான பாகிஸ்தான் வீட்டுக்கு கிளம்புவதற்கு தயாராக இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற அந்த அணி இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் 8ஆவது முறையாக தோற்று ஆஸ்திரேலியாவிடமும் வீழ்ந்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை பதிவு செய்தது.
அத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. ஆனால் இலங்கையை தோற்கடித்த நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. அதனால் இங்கிலாந்துக்கு எதிராக கடைசிப் போட்டியில் 287 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இந்தியாவுடன் அரையிறுதியில் மோத முடியும் என்ற சாத்தியமற்ற நிலைமைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வியே தங்களுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று தெரிவிக்கும் பாபர் அசாம் இங்கிலாந்துக்கு எதிராக பெரிய வெற்றியை பெறுவதற்கான திட்டத்தை தயாராக வைத்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக நியூஸிலாந்துக்கு எதிராக அதிரடியான வெற்றியை பெற்றுக் கொடுத்த பஃகார் ஸமான் 20 – 30 ஓவர்கள் நின்றால் தங்களால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.