
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக மும்பை நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மார்ச் 31-ஆம் தேதியன்று நடந்த 7-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை எதிர்கொண்ட லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று வரலாற்றில் தங்களது முதல் ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 210/7 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். அதை தொடர்ந்து 211 என்ற பெரிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 61 ரன்களும் கேப்டன் கேஎல் ராகுல் 40 ரன்களும் எடுத்தனர். அந்த நல்ல தொடக்கத்தை அபாரமாக பயன்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக 23 பந்துகளில் 55* ரன்களை குவித்து தனது அணியை வெற்றிபெற வைத்தார்.
அந்த போட்டியில் 211 என்ற இலக்கை துரத்திய லக்னோ அணி பேட்ஸ்மென்கள் ஆரம்பம் முதலே சென்னை பவுலர்களை கருணையே இல்லாமல் அடித்தனர். அதற்கு மத்தியில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ட்வைன் பிரிடோரியஸ் முடிந்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 31 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற நட்சத்திர வீரர் ட்வைன் பிராவோ தன் பங்கிற்கு 4 ஓவர்களை வீசி 35 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இருப்பினும் ஏனைய பவுலர்கள் ரன்களை கொடுத்த காரணத்தாலும் ஒருசில முக்கிய காட்சிகளை கோட்டை விட்ட காரணத்தாலும் சென்னை கடைசிவரை பரிதாபமாக தோல்வி அடைந்தது.