
BAN vs PAK, 2nd T20I: இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்த நிலையில் ஜாக்கர் அலி அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதல் போட்டியில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு பர்வேஸ் ஹொசைன் மற்றும் முகமது நைம் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் முகமது நைம் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் 8 ரன்களுக்கும், தாவ்ஹித் ஹிரிடோய் ரன்காள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைனும் 13 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜக்கர் அலி மற்றும் மஹெதி ஹசன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மஹெதி ஹசன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.