
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. இதன்மூலம் 68 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் கலித் அஹ்மத், அறிமுக வீரர் நஹித் ரானா ஆகியோர் தலா 3 மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் தைஜுல் இஸ்லாம் 47 ரன்கள் எடுத்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், ரஹிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.