Advertisement

BAN vs SL, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 243 ரன்கள் பின் தங்கியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 02, 2024 • 19:42 PM
BAN vs SL, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
BAN vs SL, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்! (Image Source: Google)
Advertisement

இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 93 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்களையும், திமுத் கருணரத்னே 86 ரன்களையும் சேர்த்து அசத்தினர். வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Trending


இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் 54 ரன்கள் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியதால், அந்த அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை மட்டுமே சேர்த்தது.  இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏஞ்சலோ மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது விக்கெட்டை இழக்க, இலங்கை அணி 157 ரன்கள் சேர்த்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 4 விக்கெட்டுகளையும், கலெத் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இலங்கை அணி 510 ரன்கள் என்ற இலக்கை வங்கதேச அணிக்கு நிர்ணயித்தது. 

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் மஹ்முத் ஹசன் 24 ரன்களிலும், ஸகிர் ஹசன் 19 ரன்களிலும், கேப்டன் நஹ்முல் ஹொசைன் 20 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் - ஷாகிப் அல் ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய மொமினுல் ஹக் அரைசதம் கடந்தார்.

அதன்பின் 50 ரன்கள் எடுத்த கையோடு மொமினுல் ஹக் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாகிப் அல் ஹசன் 36 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 38 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஹதத் ஹொசைனும் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

இதன் காரணமாக நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை மட்டுமே எடுத்ததுள்ளது. இதில் மெஹிதி ஹசன் 44 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லஹிரு, ஜெயசூர்யா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 243 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement