
வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மாவும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 28 ரன்களை எடுத்திருந்த ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 40 ரன்களுக்கு ஆட்டமிழதார்.