Advertisement
Advertisement
Advertisement

SA vs BAN: ஒரு தலைபட்சமாக செய்லபட்டார்களா நடுவர்கள்? - ரசிகர்கள் கொந்தளிப்பு!

தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் போது போட்டி நடுவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 05, 2022 • 11:38 AM
Bangladesh Set To Lodge Complaint Against Umpires, South Africa After Defeat In 1st Test
Bangladesh Set To Lodge Complaint Against Umpires, South Africa After Defeat In 1st Test (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. கடந்த மார்ச் 18-ஆம் தேதி துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட வங்கதேசம் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சரித்திர சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து இந்த 2 அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று டர்பனில் துவங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Trending


அதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 367 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக தெம்பா பவுமா 93 ரன்களும் கேப்டன் டீன் எல்கர் 67 ரன்களும் எடுத்து கை கொடுத்தனர். வங்கதேசம் சார்பில் பந்துவீச்சில் அசத்திய கலீத் அஹமத் 4 விக்கெட்டுகளையும் மெஹந்தி ஹசன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசத்தை தனது அபார பந்துவீச்சால் தென்னாபிரிக்க பவுலர்கள் ஆரம்பம் முதலே கட்டுப்படுத்தினார்கள்.

இருப்பினும் அந்த அணியின் இளம் தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் மட்டும் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாட மறுபுறம் வந்த ரஹிம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த ஹஸன் ஜாய் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட சதமடித்து 137 ரன்கள் விளாசினார். 

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக சதமடித்த வங்கதேச வீரர் என்ற மாபெரும் சரித்திரத்தை அவர் படைத்தார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த முதல் வங்கதேச வீரர் என்ற அபார சாதனையும் படைத்தார். அவரின் ஆட்டத்தால் ஓரளவு தப்பிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 298 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தென்னாப்பிரிக்கா சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஹர்மேர் 4 விக்கெட்டுகளையும் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 69 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்காவை அபாரமாக பந்துவீசி கட்டுப்படுத்திய வங்கதேசம் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தது. தென்ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டீன் எல்கர் 64 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய மெஹந்தி ஹசன் மற்றும் எபோடட் ஹுசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இறுதியில் 274 என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்திய வங்கதேசம் யாரும் எதிர்பாராத வண்ணம் தென்னாப்பிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் மாயாஜால சுழல்பந்து வீச்சில் சிக்கியது. அவரின் அற்புதமான சுழலில் சிக்கிய பெரும்பாலான வங்கதேச வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும் டக் அவுட்டாகியும் வரிசையாக பெவிலியன் திரும்பியதால் வெறும் 19 ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணி 53 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக சாண்டோ 26 ரன்கள் எடுக்க தென்ஆப்ரிக்கா சார்பில் வெறும் 10 மாயாஜால ஓவர்களை மட்டுமே வீசிய சுழல் பந்துவீச்சாளர் கேஷவ் மஹராஜ் 7 விக்கெட்டுகளை சாய்த்து வங்கதேசத்தை தனி ஒருவனாக வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இதனால் 220 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த தென்ஆப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 – 0* என முன்னிலை பெற்று ஒருநாள் தொடரில் வரலாற்று தோல்வியை பரிசளித்த வங்கதேசத்தை பழிதீர்த்து பதிலடி கொடுத்தது.

முன்னதாக இந்தப் போட்டியில் அம்பயர்கள் ஒருதலைப்பட்சமாக தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக வங்கதேசம் புதிய புகாரை எழுப்பியதால் சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது கடந்த 2020 முதல் கரோனா காரணமாக உலகில் எங்கு சர்வதேசப் போட்டிகள் நடை பெற்றாலும் அதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த உள்ளூர் அம்பயர்கள் தான் போட்டியின் நடுவர்களாக செயல்படுவார்கள் என ஐசிசி அறிவித்தது. அதன்படி இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மறஸ் எரஸ்மஸ் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் ஆகியோர் களத்தில் அம்பயரிங் செய்தனர். 

அந்த நிலையில் இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய கேப்டன் டீன் எல்கர் ஒரு கட்டத்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்டபோது அதை அம்பயர் வழங்காத காரணத்தால் அவர் தப்பித்து போட்டியையே மாற்றினார். அது கூட பரவாயில்லை அடுத்த ஒரு சில ஓவர்களில் தென்ஆப்பிரிக்காவின் சரேல் ஏர்வி அதேபோல் எல்பிடபிள்யூ முறையில் வங்கதேசம் அவுட் கேட்க அதற்கு அம்பயர் அவுட் கொடுக்க மறுத்தார். அதை வங்கதேசம் ரெவியூ செய்யாத நிலையில் டிவி ரிப்ளையிகள் பார்த்தபோது அது தெளிவான அவுட் என தெரியவந்தது. 

மேலும் குறைவான ரிவ்யூ இருந்த காரணத்தால் வங்கதேசம் ரெவியூ எடுக்காத நிறைய தருணங்களில் அம்பயரின் தவறு தெளிவாக தெரிந்தது. அதேசமயம் 2-வது இன்னிங்சில் வங்கதேசம் 53 ரன்களுக்கு சுருண்ட போது தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஒருசில தருணங்களில் அவுட் கேட்டு முடிப்பதற்குள் அம்பயர்கள் தாரளமாக அவுட் கொடுத்தனர். இதற்கு ஆதரமாக அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் உலா விட்டுள்ள வங்கதேச ரசிகர்கள் அம்பயர்களை திட்டி வருகின்றனர்.

“ஒருசில முடிவுகள் எங்களுக்கு எதிராக அமைந்தது. இல்லையேல் நாங்கள் 270 ரன்களுக்கு பதிலாக 180 ரன்களை மட்டுமே சேசிங் செய்திருப்போம். இதற்காக நாங்கள் அம்பயர்களை குறை சொல்ல விரும்பவில்லை என்றாலும் சமீப காலங்களில் நாங்கள் பார்த்ததில் இது மோசமான அம்பயரிங் ஆகும். மேலும் தற்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் இனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் அந்தப் போட்டியில் விளையாடும் இரு நாடுகளை சேர்ந்த அம்பயர் இல்லாத வேறொரு நாட்டைச் சேர்ந்த நடுநிலை அம்பயரை நியமிக்க ஐசிசி முடிவு எடுக்க வேண்டும்” என போட்டி முடிந்த பின் கடுப்பான வங்கதேச அணி நிர்வாகம் தெரிவித்தது.

இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் 3ஆவது போட்டியில் இதேபோல ஒரு தலைப்பட்சமாக அம்பயரிங் செய்ததை தட்டிக் கேட்ட வங்கதேச அணி மேலாளர் நபிஸ் இஃபால் உடன் அந்த போட்டியில் அம்பயராக செயல்பட்ட ஆண்டி பைக்ராப்ட் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஏற்கனவே அவரின் மீது ஐசிசியிடம் வங்கதேச அணி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் மீண்டும் அதே கதை தொடர்வதால் 2ஆவது முறையாக மீண்டும் ஐசிசியிடம் புகார் செய்ய உள்ளதாக வங்கதேச அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement