
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வெல்லும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நாளைய தினம் இப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், வங்கதேச அணி பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. அந்தவகையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜக்கார் அலி காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.