
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பரோடா அணிக்கு ஷஷ்வத் ராவத் - அபிமன்யூ சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய அபிமன்யூ சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிமன்யூ சிங் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஷஷ்வத் ராவத் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தர். பின்னர் இணைந்த பானு பணியா - ஷிவாலிக் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் ஷிவாலிக் சர்மா 55 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து வந்த விஷ்னு சோலங்கியும் அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்த பானு பணியா சதமடித்து அசத்தியதுடன், 5 பவுண்டரி, 15 சிக்ஸர்கள் என 134 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களைக் குவித்தது.