
சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (மே 29) நடக்கிறது. இக்கூட்டத்தில் இந்தியாவில் பரவி வரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் கிரிக்கெட் தொடர்களை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் இந்தியாவில் நடந்து வந்த 14ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பயோ பபுள் சூழலைத் தாண்டி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த 4ஆம் தேதி ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியிருக்கின்றன.
தற்போது இந்தியாவில் கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் எஞ்சிய ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து விடலாம் என்று திட்டமிட்டு பிசிசிஐ அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரின் அதிகாரபூர்வ தேதி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.