
இந்தியாவில் நடப்பாண்டில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான சென்னை உள்பட 9 இடங்களை ஐசிசிக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
ஐசிசிக்கு அளித்துள்ள பட்டியலில் சென்னை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய 9 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவிலும், சம்பந்தப்பட்ட இடங்களிலும் இருக்கும் கரோனா சூழலின் அடிப்படையில், போட்டி நடத்தப்படும் இடங்களை ஐசிசி இறுதி செய்யும்.
இப்போதைய நிலையில், அக்டோபார் முதல் நவம்பர் வரை நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை நவம்பர் 13 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிக்கான பரிசீலிக்கப்படும் இடங்களில் சிலவற்றை ஐசிசி ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது கரோனா 2ஆவது அலை தீவிரமாகி உள்ளதால் ஐசிசி தனது நிபுணர் குழுக்களை இந்தியாவுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் வரும் 26ஆம் தேதி ஐசிசி குழு ஒன்று இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.