
கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும். ஆனால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்கும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கரோனா வைரஸ் பரவல் 2ஆவது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகரித்து வரும் கரோனா அச்சம் காரணமாக, டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். தனது குடும்பத்தினர் கரோனா அச்சத்தில் இருப்பதால், அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ராஜஸ்தான் அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டை, இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் கரோனா அச்சம், பயோ-பபுள் சூழல் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர்.