
ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் நேபாள் அணிகளுக்கு இடையே பாகிஸ்தானில் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இந்திய அணி தனது முதல் சுற்றில் இரண்டு போட்டிகளை செப்டம்பர் இரண்டு மற்றும் நான்காம் தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது.
இதற்கு முன்னதாக இந்திய அணி பெங்களூரில் உள்ள ஆலூர் மைதானத்தில் தங்கி கண்டிஷனிங் பயிற்சியில் ஆறு நாட்கள் இருப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. தற்பொழுது ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியினர் அனைவரும் அங்கே முகாமிட்டு இருக்கிறார்கள். இந்த கண்டிஷனிங் பயிற்சி முகாமுக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு உடல் தகுதியை சோதிக்கும் விதமாக யோ யோ என்ற உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு குறைந்தபட்சமாக 16.5 புள்ளிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சோதனையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் தேர்வடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று முன்தினம் யோயோ பயிற்சியை முடித்துக் கொண்டு, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 17.2 என்று யோயோ பயிற்சி முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருந்தார். தற்பொழுது அவருடைய பதிவுதான் பிரச்சனையாக மாறி இருக்கிறது.