
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன. இருப்பினும் இவ்விரு அணிகளும் ஐசிசி நடத்தும் முக்கியமான தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகின்றனர்.