
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடிய நிலையில் கயமடிந்தர். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமானதை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஒல்லி போப் இத்தொடரில் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதேசமயம் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாக முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.