
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இத்தொடரின் முதல் பகுதியானது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இந்திய வீரர்களுக்கான உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன. இதில் தமிழ்நாடு அணியை ஷாருக் கானும், கேரள அணியை சஞ்சு சாம்சனும், மும்பை அணியை ஸ்ரேயாஸ் ஐயரும் வழிநடத்தவுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் உத்தர பிரதேச அணியை அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான உத்தர பிரதேச அணியின் கேப்டனாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் செயல்பட்ட நிலையில், தற்போது அவர் அணியில் சாதாரண வீரராக மட்டுமே இடம்பிடித்துள்ளார்.