
டி20 உலகக் கோப்பைத் தொடரின் 2ஆவது அரையிறுதியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்களான முகமது ரிஸ்வானும் சோயிப் மாலிக்கும் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள்.
இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா இல்லை எனத் தெரிய வந்துள்ளது. புதன் அன்று காலையில் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பயிற்சியில் பங்கேற்பதைத் தவிர்த்தார்கள். இதனால் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பங்கேற்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருவருடைய உடற்தகுதியை முன்வைத்து பாகிஸ்தான் அணி இதுகுறித்த முடிவை எடுக்கவுள்ளது.
இருவரில் ஒருவர் விளையாடாமல் போனாலும் பாகிஸ்தான் அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும். ஏனெனில் டி20 உலகக் கோப்பைப் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முகமது ரிஸ்வான் 3ஆம் இடத்தில் உள்ளார். குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை சோயிப் மாலிக் பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியின் நடுவரிசையில் முக்கிய வீரராகவும் உள்ளார்.