
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிறகு விளையாடிய இந்திய அணி, 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோடு, ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது. குயிண்டன் டி காக் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வானார்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி அரை சதமெடுத்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார். அப்போது கேமரா அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பியது. அவர் கையில் குழந்தை இருந்ததைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.
காரணம், இதுவரை தனது மகளின் புகைப்படத்தை கோலி வெளியிட்டதில்லை. வாமிகாவின் முகம் தெரியாதவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டுமே இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பில் அக்குழந்தையை முதல்முதலாகப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்தது.