
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் ஜோ ரூட் 37 ரன்களையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்காலையும், பென் டக்கெட் 24 ரன்களையும், ஜோஸ் பட்லர் 21 ரன்கலையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 179 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியிலும் ஸ்டப்ஸ், ரிக்கெல்டன் ஆகியோர் சோபிக்க தவறினர். அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் வேன்டர் டுசென் 72 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 29.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறியது.