
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்னும் இரு தினங்களில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னதாக பாகிஸ்தானில் மட்டும் இத்தொடர் நடைபெற இருந்தது.
ஆனால் அதன்பின் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததை அடுத்து இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடப்படும் என்று ஐசிசி அறிவித்தது. அதன்படி இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு ஐசிசி தொடர்களின் போதும் நடத்தப்படும் கேப்டன்ஸ் மீட் அப் நிகழ்ச்சியையும் இம்முறை ஐசிசி ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஒரு காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது. வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 இல் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் கராச்சி மைதானத்தில் ஏற்றப்பட்டன. இந்நிலையில், அந்த மைதானத்தில் ஏற்றப்பட்ட கொடிகளில் இந்தியாவின் மூவர்ணக் கொடியானது இடம்பெறவில்லை. இது தற்போது விவாதமாக வெடித்துள்ளது.