
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சினெல்லா ஹென்றி யுபி வாரியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சினெல்லா ஹென்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 62 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் எடுத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.