
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற இருந்தது.
ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இந்த டி20 தொடரானது சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரன ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளார்.