
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அதன்படி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 3ஆவது போட்டியில் இலங்கை - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க - திமுத் கருணரத்னே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடருந்து சிறப்பாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடக்க,இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 57 ரன்களில் நிஷங்காவும் 52 ரன்களில் கருனரத்னேவும் ஆட்டமிழந்தனர்.