
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ், கயானா அமேசன் வாரியர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு சுனில் நரைன் - ஜேசன் ராய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜேசன் ராயுடன் இணைந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஆனால் மறுபக்கம் ஜேசன் ராய் 25 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கீரன் பொல்லார்டும் 17 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூரன் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 91 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரஸல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது