
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 40ஆவது முறையாக இறுதிப்போடிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அணி மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 146 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின் விளையாடிய மும்பை அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால் நிச்சயம் இப்போட்டியில் தமிழ்நாடு அணி கம்பேக் கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன்பின் இணைந்த ஷர்துல் தாக்கூர் - தனுஷ் கோட்யான் இணையின் அபார ஆட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அணி பந்துவீச்சாளர் தவறினர். இதனை பயன்படுத்தி ஷர்துல் தாக்கூர் 109 ரன்களையும், தனுஷ் கோட்யான் 89 ரன்களையும் சேர்க்க மும்பை அணி வலுவான முன்னிலையைப் பெற்றது. அதன்பின் களமிறங்கிய தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.