
கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் அதிகம் பேசப்பட்டது விராட் கோலி எப்போது ஃபார்முக்கு வருவார் என்பதுதான். தற்போது 33 வயதான மூத்த வீரர் விராட் கோலி, இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தவர். தனது ஆக்ரோஷமான ஆட்டத்தாலும், அதிவேக ரன் குவிப்பாலும் ரன் மெஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இதனால் சர்வதேச அளவில் நம்பர் ஒன் வீரராகவும் இருந்து வந்தார். ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு விராட் கோலி செஞ்சுரி எதுவும் அடிக்கவில்லை. ரன்கள் குவிக்கவும் தடுமாறி வருகிறார்.
இதனால் கடந்த ஆண்டு அவர், அனைத்து விதமானப் போட்டிகளில், கேப்டன் பொறுப்புகளில் இருந்து பதவி விலகினார். இதையடுத்து இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு டூ பிளசிஸ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். கேப்டன் பொறுப்பு அழுத்தம் காரணமாகவே ரன்கள் குவிக்க கோலி தடுமாறுவதாக கூறப்பட்டு வந்தாலும், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியப் பின்னரும், சொற்ப ரன்களே எடுத்து ஆட்டம் இழப்பதால், அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ள தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் , விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார். தற்போதைய சரிவில் இருந்து மீண்டு வந்து விரைவில் விராட் கோலி ரன்கள் குவிப்பார் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் விராட் கோலி ரன் எடுப்பதில் மிகவும் தடுமாறியது, பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அணியை விட்டு விலகி சில காலத்திற்கு அவர் ஓய்வு எடுக்கலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா போன்றோர் விராட் கோலிக்கு ஆதரவாக பேசினர்.