
இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் கடந்த ஜூன் மாதம் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்தார். இதனையடுத்து அவர் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரான எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். மேற்கொண்டு அத்தொடரின் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எனது ஓய்வு முடிவுக்குப் பிறகு லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை விளையாட மனதளவிலும் உடலளவிலும் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
மிக முக்கியமாக, இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஷிகர் தவான், எதிர்வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், தற்போது தினேஷ் கார்த்திக்கும் இத்தொடரில் விளையாடவுள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.