
இந்தியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பின்தங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணி சார்பாக டி காக்கிற்கு மாற்று வீரராக களமிறங்கிய கிளாஸன் 46 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 7 பவுண்டரி என 81 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்று இருந்தார். ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியையும் வெற்றி பெற்றிருந்த தென்னாபிரிக்க அணியானது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.