
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் நாளை 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த சூழலில், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து ரசிகர்கள் உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வென்ற ஆஸ்திரேலிய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
பர்மிங்ஹாமில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதற்கு அந்த அணி முதல் இன்னிங்ஸில் 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோ டிக்ளேர் செய்தது முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸின் சிறப்பான கேப்டன்ஷிப், பவுலிங், பேட்டிங் ஆகியவற்றுடன், உஸ்மான் கவாஜாவின் பேட்டிங்கும் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
இந்நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கும் போட்டி ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து ப திலடி கொடுக்குமா அல்லது, 2 ஆவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.