ENG vs IND, 2nd ODI: இங்கிலாந்தை 246-ல் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 247 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோவ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஜேசன் ராய் 23 ரன்களில் ஆட்டமிழக்க, ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் யுஸ்வேந்திர சஹாலின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதனைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த லியாம் லிவிங்ஸ்டோன் 33 ரன்களிலும், மொயீன் அலி 47 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இறுதியில் டேவிட் வில்லி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 49 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now