
2023 ஆம் ஆண்டு உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5 தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரை கடைசியாக இந்திய அணி 2011 ஆம் ஆண்டு வென்றது. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால் இதில் ரோகித் சர்மா படை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான அட்டவணை தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஆட்டத்தில் கடந்த முறை இறுதிப்போட்டியில் மோதிய நியூசிலாந்து அணியும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் பல பரிட்சை நடத்துகின்றனர். இதேபோன்று நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.