
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமான முடிந்துள்ள நிலையில், 16வது சீசனும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த 15 சீசனில் 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் சிஎஸ்கே அணி, இந்த சீசனிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. 2 சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற சிஎஸ்கே அணி, ஐபிஎல்லில் ஃபைனல் வரை செல்வதையும், கோப்பையை வெல்வதையும் ஒரு வழக்கமாகவே வைத்துள்ளது.
அந்தளவிற்கு அந்த அணி ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் கேப்டன் தோனி தான். எனவே சிஎஸ்கே அணி தொடர்ந்து இதேமாதிரி ஜொலிக்க வேண்டுமானால் அதற்கு சிறப்பான கேப்டன் அவசியம். எனவே தோனிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி வலுத்துவருகிறது. தான் இருக்கும்போதே அடுத்த கேப்டனை உருவாக்கி கொடுத்துவிட வேண்டும் என நினைத்த தோனி, கடந்த சீசனில் ஜடேஜாவை கேப்டனாக்கினார். ஆனால் ஜடேஜா கேப்டன்சியில் ஜொலிக்கவில்லை. அவரது கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை தழுவியது.
மேலும் ஜடேஜா ஒரு கேப்டனாக சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலும் இருந்தது. தோனியின் தலையீடுகள் அதிகம் இருந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜடேஜா. அதன்பின்னர் சிஎஸ்கே அணியுடனான மோதல் போக்கையும் மீறி, ஜடேஜா சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டார். தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.