
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. முன்னதாக கடந்த இரு சீசன்களாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், நடப்பு சீசனிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார். இதன் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.