
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை செமன்செய்தன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று கெய்ர்ன்ஸில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஒரு ரன்னிலும், ரியான் ரிக்கெல்டன் 13 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 24 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 49 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த டெவால்ட் பிரீவிஸ் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் பிரீவிஸி ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 25 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்டப்ஸும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரஸ்ஸி வேண்டர் டுசென் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.