Advertisement

WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!

ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 06, 2024 • 22:53 PM
WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!
WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் ஜெயண்ட்ஸ்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் - கேப்டன் பெத் மூனி இணை முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இருவரும் பந்தை தூக்கி அடிப்பதற்கு பதிலாக, பந்திற்கு ஏற்றவாறு தங்கள் ஷாட்டுகளை விளாட இந்த இருவரது பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.

Trending


இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்துடன் முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். அதன்பின் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா வோல்வார்ட் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் 45 பந்துகளில் 13 பவுண்டரிகளை அடித்து 76 ரன்கள் எடுத்த நிலையில் நூலிழையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

ஆனாலும் மறுபக்கம் தனது அதிரடியான ஆட்டத்தை கைவிடாத கேப்டன் பெத் மூனி ஒருபக்கம் ஸ்கோரை உயர்த்தி வர, மறுமுனையில் களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, அடுத்த பந்திலேயே ஆஷ்லே கார்ட்னர் மற்றும் ஹேமலதா ஆகியோர் தூக்கி அடிக்க முயற்சித்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி  12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 85 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்கு வகையில் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 24 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த மேகனாவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் இணைந்த எல்லிஸ் பெர்ரி - சோஃபி டிவைன் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. ஒருகட்டத்தில் இருவரும் அதிரடியாக விளையாட தொடங்கிய நிலையில் சோஃபி டிவைன் 23 ரன்களுக்கும், எல்லிஸ் பெர்ரி 24 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த ரிச்சா கோஷ் - ஜார்ஜியா வேர்ஹாம் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

அதுவரை ஆர்சிபி அணி தோல்வியைத் தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் அபாரமாக செயல்பட்டு பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். இதில் ரிச்சா கோஷ் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் ஆர்சிபி அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 49 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கட்ட ஜார்ஜியா வேர்ஹாமும் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 48 ரன்களுக்கு ரன் அவுட்டாக, ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement