முதல் 10 ஓவர்கள் ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது - ரியான் பராக்!
பேட்டிங்கின் போதும் நாங்கள் முதல் 10 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெறும் அணியாக இருந்தோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் விராட் கோலி 70 ரன்களுக்கும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்ம 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
Also Read
இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வேல் - வைபவ் சூர்யவன்ஷி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்த நிலையில், சூர்யவன்ஷி 16 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரியான் பராக் 22 ரன்களுக்கும், நிதீஷ் ரானா 28 ரன்களுக்கும் துருவ் ஜூரெல் 47 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், “நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். மேலும் இந்த விக்கெட்டுகள் 210-215 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்காக இருக்கும் என்று நினைத்தேன். மேலும் நாங்கள் எதிரணியை நினைத்ததை விட குறைந்த ரன்களில் தடுத்தும் நிறுத்தினோம். மேற்கொண்டு பேட்டிங்கின் போதும் நாங்கள் முதல் 10 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெறும் அணியாக இருந்தோம்.
ஆனால் நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம். மேலும் எங்களுக்கு அணி ஊழியர்கள் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை வழங்கியுள்ளனர், அதனால் சுதந்திரமாக விளையாட வேண்டிய பொறுப்பு எங்கள் மீது உள்ளது. இது போன்ற சூழ்நிலைகளைப் பற்றி நாங்கள் பேசியுள்ளோம், ஆனால் இன்றிரவு அதை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. இனி நாங்கள் இத்தொடரில் எங்களின் பெருமைக்காக விளையாட வேண்டும்.
Also Read: LIVE Cricket Score
எங்களை ஆதரிக்கும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். இது போன்ற ஒரு தொடரில் நாங்கள் இங்கு வந்து விளையாடுவதற்கு மிகவும் கடினமாக உழைக்கும் பலர் உள்ளனர். அவர்களுக்காக இனி வரும் போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற முயற்சி செய்ய வேண்டும். இந்த அணிக்காக விளையாடுவதற்கும் மிகவும் நன்றியுணர்வும் மரியாதையும் கொள்ள வேண்டும், அடுத்த முறை விளையாடும்போது அதைக் காட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now