
இந்திய அணிக்கு எப்பொழுதுமே இருந்திருக்காத வகையில் பினிஷர் இடத்தில் மகேந்திர சிங் தோனி மிகச் சிறப்பாக இருந்தார். மேலும் இன்று வரை உலகில் மிகச்சிறந்த பினிஷர் ஆக அவர்தான் பார்க்கவும் படுகிறார். இப்படிப்பட்ட ஒருவர் அந்த இடத்தை விட்டு விலகும் பொழுது, அந்த இடத்திற்கான சரியான வீரர் கிடைப்பது, அவ்வளவு எளிதாக இந்திய அணி நிர்வாகத்திற்கு அமையவில்லை.
எனவே இந்திய அணி ஏற்கனவே நான்காவது இடத்தில் பேட்டிங்கில் இருந்த பிரச்சனையை சரி செய்து கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தியது. ஆட்டம் செல்கின்ற போக்கில் யாராவது ஃபினிஷர்களாக மாறிக்கொள்ள, அந்தந்த ஆட்டத்தில் மட்டுமே பார்க்கப்பட்டது. தற்போது வரை அந்த நிலைதான் நீடித்து வருகிறது என்று கூட கூறலாம்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து அணியில் தக்க வைத்து வந்தது. இதற்குக் காரணம் அவரை பினிஷர் ரோலில் பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் திட்டமிடுகிறது. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்து வருபவராகவே இருந்திருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த இரண்டு போட்டிகளில் அவர் ஒரு பினிஷராக மிகச்சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்.