
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் வரலாற்றில் இந்தியா கண்டெடுத்த ஒரு மகத்தான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ள அவர் 2007, 2011 ஆகிய உலகக் கோப்பைகளை வென்ற இந்திய அணியில் சுழல் பந்துவீச்சு துறையில் துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.
அதேப்போல் ஐபிஎல் தொடரிலும் மும்பை, சென்னை போன்ற அணிகளில் விளையாடி சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள அவர் இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு சாதித்துள்ளார். இருப்பினும் அவரது வாழ்நாளில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமன்சை குரங்கு என திட்டி சர்ச்சையில் சிக்கிய அவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய கருப்பு புள்ளியை ஏற்படுத்தினார்.
அதைப்போல் ஐபிஎல் தொடரில் அதுவும் முதல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய போது பஞ்சாப் அணிக்காக விளையாடிய கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்து மேலும் ஒரு சர்ச்சையை உண்டாக்கினார். ஆம் மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதிய ஒரு போட்டியின் முடிவில் ஸ்ரீசாந்த் அழுது கொண்டிருந்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதனால் பஞ்சாப் உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா உட்பட பஞ்சாப் அணியினர் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது ஹர்பஜன் சிங் தம்மை கன்னத்தில் அறைந்ததாக அழுது கொண்டே தெரிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.