
ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. அதன்படி நேற்று துவங்கிய இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதித்து துவங்கியதால் போட்டி இரு அணிகளுக்குமே 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக தீபக் ஹூடா இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 47 ரன்களை குவித்தார்.