
இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பைக்குள் நுழைந்த பொழுது எக்கச்சக்க விமர்சனங்கள் இருந்தது. கூடவே சந்தேகங்களும் இருந்தது. இந்த நிலையில் ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதிய போட்டியில், மிக முக்கியமான பேட்ஸ்மேன்கள் அனைவரும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களிடம் சிக்கினார்கள்.
இந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக விளையாடிய பொழுது, பீல்டிங் மற்றும் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி இல்லை. அந்தப் போட்டியில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் சிறப்பாக முடித்து இருந்தார்கள். இந்த பாசிட்டிவ் அடுத்து நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது எதிரொலித்தது. மிகச் சிறப்பான துவக்கத்தை ரோகித் சர்மா மற்றும் கில் இந்திய அணிக்கு கொடுத்தார்கள்.
இதனைப் பயன்படுத்தி விளையாடிய விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆசிய கோப்பையில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்னாக 233 ரன்களை பதிவு செய்து, இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவிக்க உறுதுணையாக இருந்தார்கள். மேற்கொண்டு பந்துவீச்சுக்கு வந்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும், தங்களுடைய மொத்த வித்தையையும் இறக்கி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தடுமாற விட்டார்கள்.