
உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கேரளாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் அறிவித்தார். கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் அதன்பின் மிகச் சிறப்பாக செயல்பட்டு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடத் தொடங்கினார்.
கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை யாருமே எதிர்பாராத வண்ணம் எம்எஸ் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வென்று சரித்திரம் படைத்தது. அந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி மற்றும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அந்த அணியின் மிஸ்பா-உல்-ஹக் கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக பிடித்தது போன்ற பல வகைகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ஸ்ரீசாந்த் முக்கிய பங்காற்றி இருந்தார்.
அதை தொடர்ந்து அதே வருடம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்ற ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்தார். அதன் காரணமாக 2010 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பந்துவீச்சாளராக உருவெடுத்து அவர் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.